Header Ads



பாகிஸ்தானில் கொலை குற்றம் சுமத்தப்பட்ட 9 மாதக் குழந்தை விடுவிப்பு

பாகிஸ்தானில் காவல்துறைக் குழுவினரைத் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக கடந்த மூன்றாம் தேதியன்று லாகூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 25 பேர் கொண்ட குழுவில் ஒன்பது மாதக் குழந்தை ஒன்றும் இருந்தது. மூஸா என்ற அந்த ஆண் குழந்தைக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி குழந்தையின் அறிக்கையைப் பதிவு பண்ணுமாறு காவல்துறையிடம் குறிப்பிட்டார். தாங்கள் வாழும் பகுதியில் மின்சாரம் சரிவர அளிக்கப்படாததை எதிர்த்ததே தாங்கள் கைது செய்யப்பட்டதற்கு காரணம் என்று மூசாவின் தந்தை தெரிவித்தார்.

குழந்தையின் மீது வழக்கு பதிவு செய்த சம்பவத்தில் குழப்பம் நடந்துள்ளதாகத் தெரிவித்த காவல்துறை அதிகாரி ரானா ஜப்பார் இந்தத் தவறுக்காக சப்- இன்ஸ்பெக்டர் ஒருவரை பணி நீக்கம் செய்தார். இந்த வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறையினர் இந்தக் குழந்தை மீதான குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொண்டதை அடுத்து நீதிபதி இந்தக் குழநதையை விடுதலை செய்துள்ளதாக குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல் இர்பான் தரார் தெரிவித்தார். நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரிக்காமலே காவல்துறையினர் குழந்தை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இதுகுறித்த விளக்கத்தைக் கேட்ட நீதிபதி இறுதியில் அக்குழந்தையை விடுதலை செய்துள்ளார் என்று அவர் கூறினார்.

ஒன்பது மாதக்குழந்தை மீது வழக்கு பதிவு செய்த இந்த சம்பவமானது நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பின் செயலிழந்த நிலையை வெளிப்படுத்தியுள்ளது என்று பத்திரிகை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments

Powered by Blogger.