Header Ads



ஈரானுக்கு எதிராக அமெரிக்கா யுத்தம் தொடுத்தால்..! எச்சரிக்கிறது துருக்கி

"அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின், அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்பவர்கள், 1980-1988 காலப்பகுதியில் ஈராக்-ஈரான் யுத்தத்தில் சுமார் எட்டு வருடகாலம் சளைக்காமல் தன்னைத் தற்காத்துக்கொண்ட அதன் வல்லமையை நினைவுகூர்வது நல்லது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"ஈரானியப் புரட்சி இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் போதியளவு பயிற்றுவிக்கப்படாத படையணிகளும், போதிய இராணுவத் தளபாடங்களும் அற்ற நிலையிலும் அந்த நாடு, நன்கு தேர்ச்சிபெற்ற, ஆயுத பலம் மிகுந்த ஈராக்கியப் படைகளை வெற்றிகரமாய் எதிர்கொண்டுள்ளது. இத்தனைக்கும் ஈராக் படைகளுக்கு அமெரிக்காவினதும் மேற்கு நாடுகளினதும் பரிபூரண ஒத்துழைப்பும் இருந்தமை குறிப்பிடத்தக்கது" என அவர்  சுட்டிக்காட்டினார்.

"ஐக்கிய அமெரிக்காவின் உண்மையான உள்ளக நிலை கவலைக்கிடமானது. வெளியுலகுக்குத் தெரியும் அளவுக்கு அதன் மாநிலங்கள் வலுவாக ஒருங்கிணைந்து காணப்படவில்லை. அதன் தென் மாநிலங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பில் பெரிதும் அதிருப்தியுற்றுள்ளன. அவை, வெகு சீக்கிரத்தில் வாஷிங்டன் அரசாங்கத்தில் இருந்து தனித்தனியாகப் பிரியும் நிலை உருவாகும். இத்தகையதோர் நெருக்கடியான நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராகப் போரில் இறங்குமானால், அது, அமெரிக்காவை அழிவுக்கே இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அண்மைக் காலமாக அமெரிக்க, இஸ்ரேலிய நாடுகள் ஈரானுக்கு எதிராகக் கடும்போக்கான நிலைப்பாட்டையே கைக்கொண்டு வருவதும், ஈரானுக்கு எதிரான தாக்குதல் ஒன்றை முன்னெடுப்பது தொடர்பில் ஆலோசித்தும் எச்சரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு எதிரான கடைசி தெரிவு இராணுவத் தாக்குதல் - ஒபாமா
பொருளாதார தடைகள் மூலம் ஈரானின் அணுசக்தி இலட்சியங்களை நிறுத்த முடியாவிட்டால் இறுதித் தெரிவாக, ஈரானிய அணுசக்தித்திட்டங்களை அழிப்பதற்கு அமெரிக்க இராணுவத்துக்கு தான் உத்தரவிடுவார் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அனைத்து தெரிவுகளும் மேசையில் உள்ளன. இறுதித் தீர்வானது இராணுவு அம்சமாகும் என அவர் கூறினார்.
அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் காலோசிதமற்ற தாக்குதல் நடத்துவதற்கு எதிராகவும் பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறன நடவடிக்கையானது ஈரான் தன்னை பாதிக்கப்பட்டவராக சித்தரிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என அவர் கூறியுள்ளார்.

இவ்வாரம் வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை  சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில்  த அத்லாண்டிக் சஞ்சிகைக்கு அளித்த செவ்வியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா  இவ்வாறு கூறியுள்ளார்.

"திட்டவட்டமான எமது நோக்கங்கள் என்ன என்பதை, கொள்கை அடிப்படையில், நான் விளம்பரப்படுத்திக் கொள்ளப்போவதில்லை. எனினும் ஈரான் அணுவாயுதங்களை கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா கூறும்போது நாம்  அதை அர்த்தபூர்வமாக கூறுகிறோம் என்பதை ஈரான் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் புரிந்துகொள்ளும் என எண்ணுகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான விவகாரத்தில்  'ஒரு இராணுவ அம்சம்' என்பது தடைகள், ராஜதந்திரம், கடந்தகாலத்தில் நுட்பமாக உணர்த்தப்பட்ட தாக்குதல் அச்சுறுத்தல் முதலானவை கலந்த பல தெரிவுகளில் ஒன்று என்பதை ஈரானும் இஸ்ரேலும் உணர்ந்துள்ளன என அவர் கூறினார்.

"ஈரான் மற்றும் அதன் ஒரேயொரு உண்மையான  நட்பு நாடும் (சிரியா) பின்னடைந்துள்ள நிலையில் திடீரென ஈரான் தான் பாதிக்கப்பட்டவராக காட்டிக்கொள்ளக்கூடிய கவனச் சிதறலை நாம் ஏன் விரும்ப வேண்டும்?"  எனவும் ஒபாமா கேள்வி எழுப்பினார்.

"உலகில் மிக கொந்தளிப்பான ஒரு பிராந்தியம் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். அப்பிராந்தியத்திலுள்ள 'பல நாடுகளுக்கு தான் அணுவாயும் வைத்திருக்காதபோது ஈரான் அணுவாயுதங்களை வைத்துக்கொள்வதை சகித்துக்கொள்ள முடியாதனவாக உள்ளன. ஈரானானது பயங்கரவாத அமைப்புகளுக்கு அனுசரணை வழங்குவதற்காக அறியப்பட்டதாகும். எனவே (அனுவாயுத) பரவல் அச்சுறுத்தலானது தீவிரமாகி வருகிறது' என ஒபாமா மேற்படி செவ்வியில் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.