Header Ads



அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அமெரிக்கா செயற்படுகிறது - ரவூப் ஹக்கீம் சீற்றம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா முன்வைத்துள்ளமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"குறித்த பிரேரணையை தவிர்த்துக்கொள்வதற்காக நாம் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆயினும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அமெரிக்காவும் அதன் சில நேச நாடுகளும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழிந்துள்ளன.

ஆனால், இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் காட்டி வரும் ஆர்வம் குறித்து மிகவும் தெளிவாக அறிந்து வைத்திருக்கும் எமது நேச நாடுகள் இந்த பிரேரணையை முறியடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அமெரிக்கா முன்மொழிந்திருக்கும் பிரேரணையில், ஏற்கெனவே உள்ள உள்ளடக்கத்தை விடவும் குறைந்த தாக்கம் உள்ளதாக மாற்றுவதற்கு சில நாடுகள் முயற்சித்து வருவதாக நாம் கேள்விப்படுகின்றோம். 

அது எவ்வாறாயினும், தனிப்பட்டதொரு நாட்டை இலக்கு வைத்து இவ்வாறானதொரு பிரேரணையை கொண்டு வருவதன் மூலம் நாட்டில் துருவப்படுத்தலை ஏற்படுத்தியுள்ள இனப்பிரச்சினையை இன்னும் பாரதூரமானதாக ஆக்குவதற்கும், குழப்புவதற்குமான ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகின்றது. 

எனவே, இவ்வாறான முயற்சியின் பக்க விளைவாக ஏற்படப் போகும் ஆபத்து  குறித்து ஒரு சிறுபான்மை சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற முறையில் என்னுடைய பக்க நியாயங்களை ஜெனீவாவில் வைத்து கூறியுள்ளேன். 

சில மேற்கு நாடுகளை பொறுத்த வரை அதனால் எதுவிதமான தாக்கமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அது மிகவும் கவலைக்குரியதாகும். அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை இலங்கை அரசாங்கத்தோடு நேசபூர்வமாக இந்த விவகாரத்தை அணுகி, அதற்கான போதிய கால அவகாசத்தை தருவதற்கு தவறியிருப்பது இராஜதந்திர ரீதியானதொரு தவறாக விளங்க போகின்றது" என்றார்

No comments

Powered by Blogger.