Header Ads



முஸ்லிம்களுக்கு எதிராக விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் தாக்குதல் - அரசாங்கமும் பௌத்த பாசிச வாதத்திற்கு அடிபணிந்துள்ளது - கலாநிதி விக்கிரமபாகு

இலங்கை சிங்கள பௌத்த பாசிஸவாத நாடாக மாறி வருகிறது. இன்று இனவாதத்துடன் ஏனைய மதங்களுக்கு எதிரான மதவாதிகளும் தலைதூக்கியுள்ளரென இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். இதனைத் தடுக்க ஜனாதிபதி முனைந்தால் ஆட்சியைக் கவிழ்க்கவும் அரசாங்கத்திற்குள் இருக்கும் அடிப்படைவாதிகள் தயங்கமாட்டார்களென்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் கத்தோலிக்க தேவாலயத்திற்குள் நுழைந்து மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனத்தை இடதுசாரி முன்னணி கடுமையாகக் கண்டிக்கின்றது. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக ரணவக தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச ஆகியோர் கடவுள்களாக போற்றப்படுகின்றனர்.

அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் பொலிஸார் அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர். ஆனால் நாம் ஆர்ப்பாட்டம் செய்தால் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இனவாதத்திற்கு தூபமிட்ட மேற்கண்ட இருவரும் இன்று கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மதங்களுக்கு எதிராகத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் இன்று சிங்கள, பௌத்த, பாசிச வாதத்திற்கு அடி பணிந்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாலும் இதனைத் தடுக்க முடியாது. தடுக்க முனைந்தால் இக் குழுவினர் ஜனாதிபதியை வெளியேற்றவும் தயங்கமாட்டார்கள். இலங்கை சிங்கள, பௌத்த நாடு. இங்கு வேறு இன மதத்தவர்கள் இல்லையென்பதே இவர்களது கொள்கையாகும். அதற்கான அத்திவாரத்தையே தற்போது ஏற்படுத்தியுள்ளனர். இது மிகவும் பயங்கரமானது.

ஆளும் கட்சியில் சிங்கள பேரினவாத பௌத்த பாசிசவாதிகள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுத்து வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுப்பது போன்று ஐ.தே. கட்சிக்குள்ளும் பேரினவாதக் குழுக்கள் ரணிலை வெளியேற்றும் படலத்தை மேற்கொண்டு வருகின்றது.  எனவே இனங்களுக்கும் மதங்களுக்கும் எதிராக செயற்படுவோருக்கு எதிராக போராட நாம் ஓரணியில் திரள வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.