Header Ads



ஈரான் பாராளுமன்றத் தேர்தல் - அஹ்மதி நஜாத்திற்கு சிக்கல்

ஈரான் பாராளுமன்றத்திற்கு (மஜ்லிஸ்) வெள்ளிக்கிழமை நடந்த தேர்தலில் ஆரம்ப கட்ட முடிவுகள் அதிபர் அஹ்மத் நஜாதின் எதிர்ப்பாளர்கள் முன்னணியில் இருப்பதாக எ.எஃப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் பதவி காலம் முடிவடைய இன்னும் ஒன்றரை வருடங்கள் மீதமுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் பழமைவாதிகளான நஜாதின் எதிர்ப்பாளர்களுக்கு பெரும்பான்மை கிடைப்பது ஆட்சி நிர்வாக விவகாரங்களில் முடிவு எடுப்பதில் நஜாதிற்கு சிக்கலை உருவாக்கும்.

இறுதி முடிவுகள் பழமை வாதிகளுக்கு ஆதரவாக மாறினால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் நஜாதின் ஆதரவாளர்களின் வெற்றியை பெரிதும் பாதிக்கும்.

தலைநகரான டெஹ்ரானுக்கு அருகேயுள்ள பல்வேறு பகுதிகளில் நடந்த தேர்தல் முடிவுகள் நஜாதின் எதிர்ப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளன. நேற்று மாலை வரை வெளியான தேர்தல் முடிவுகளில் வெற்றிப்பெற்ற 189 வேட்பாளர்களில் 97 பேர் நஜாதின் எதிர்கட்சியான பழமைவாதிகள் ஆவர். ஆறு தாராளமயவாதிகளும் வெற்றிப் பெற்றுள்ளனர். பாராளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜானி உள்ளிட்ட பிரமுகர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். மத்திய ஈரானில் கும் நகரத்தில் லாரிஜானி 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அஹ்மதி நஜாதின் இளைய சகோதரி பர்வீன் தோல்வியை தழுவியுள்ளார். டெஹ்ரானில் இருந்து 65 கி.மீ தொலைவில் பிறந்த ஊரான கர்க்ஸர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பர்வீன் பழமைவாத கட்சியின் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். தற்போது டெஹ்ரான் முனிசிபல் கவுன்சிலராக பர்வீன் உள்ளார்.

இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு ஈரானில் நடந்த 9-வது பாராளுமன்ற தேர்தலில் 4.8 கோடி வாக்காளர்களில் 67 சதவீதம் பேர் தங்களது வாக்குகளை பதிவுச் செய்தனர். இதனை அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஜ்லிஸின் 290 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அணு சக்தியின் பெயரால் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது தடைகளை வலுப்படுத்திய சூழலில் நடக்கும் தேர்தல் என்பதால் மிக முக்கியமாக அரசியல் நோக்கர்கள் இதனை உற்று நோக்குகின்றனர்.

No comments

Powered by Blogger.