Header Ads



இஸ்ரேலிய வெறியர்களே..! காஸா மீதான தாக்குதலை நிறுத்துங்கள் - துருக்கியில் மாபெரும் கண்டன பேரணி


ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) இஸ்ரேலின் காஸாமீதான படுகொலைத் தாக்குதல்களைக் கண்டித்து துருக்கியத் தலைநகர் அன்காராவில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெற்றது.

மனித உரிமைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான துருக்கிய அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த எதிர்ப்புப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அண்மைக் காலமாக காஸாமீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்விமானத் தாக்குதல்களை எதிர்த்து, "காஸாவின் அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைத் தாக்குதல்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும்!" என்ற கோரிக்கையோடு, ஆயிரக்கணக்கான துருக்கிய மனிதாபிமான ஆர்வலர்களும் சமாதானச் செயற்பாட்டாளர்களும் இஸ்ரேலியத் தூதரகமாகத் தற்காலிகமாகச் செயற்பட்டுவரும் கட்டிடத்தின்முன் அணிதிரண்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டுவரும் காஸாமீதான ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதல்களில் இதுவரை 12 வயதுக் குழந்தை உட்பட 18 பலஸ்தீன் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, 'தம்முடைய நாடு காஸா மீதான தாக்குதலைத் தொடரும்' எனத் தெரிவித்துள்ளமை சமாதானத்தை விரும்பும் மனிதாபிமான ஆர்வலர்களைப் பெரிதும் கொதிப்படைய வைத்துள்ளது.

"காஸாமீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கொலைவெறித் தாக்குதல்கள் மனித விழுமியங்களுக்கு எதிரானது என்பதோடு, முழுக்க முழுக்க காட்டுமிராண்டித்தனமானதும்கூட" எனப் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஆக்கிரமிப்பு இஸ்ரேல் காஸாமீது சட்டவிரோத முற்றுகையை அமுல்நடத்தி வருவதால், அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் சீர்குலைந்துள்ளது. இந்நிலையில், இரண்டாவது தடவையாகவும் காஸா மீதான காட்டுமிராண்டித் தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேலிய எதேச்சதிகாரப் போக்கை உலக நாடுகள் கண்டித்து, அதனைத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்" என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.