ஒஸாமாவின் மனைவிகளை விடுதலை செய்யுங்கள் - தலிபான்கள் எச்சரிக்கை
அல் குவைதா தலைவராக இருந்த ஒசாமா பின்லாடனின் மூன்றனைவிகளை விடுதலை செய்யாவிட்டால், பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தாக்கப் போவதாக, "தாரிக் இ தலிபான்' பாகிஸ்தான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து வசித்ததாக, ஒசாமா பின்லாடனின் மூன்று மனைவிகள், அவர்களது குழந்தைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தாரிக் இ தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் விடுத்த அறிக்கையில்,
"ஒசாமாவின் குடும்பத்தினர் விடுவிக்கப்படாவிட்டால், இவ்வழக்கில் தொடர்புடைய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைத் தாக்குவோம். நாடு முழுவதிலுமுள்ள அரசு மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து, தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம்' என்றார்.
அதோடு சமீபத்தில், அமெரிக்காவில் சர்வதேச வீராங்கனை விருது பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஷாத் பேகம் மற்றும் பாகிஸ்தான் அரசின் தேசிய அமைதி விருதினைப் பெற்ற மலாலா யூசுப்ஜை, 14 என்ற இளம்பெண் இருவரும் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பேசியதால் அவர்களை தங்கள் தாக்குதல் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவர்கள், மேற்குலகின் சுயநல அரசியலுக்காக செயல்படுவதாகவும், ஸ்வாத் பள்ளதாக்கில் மதச்சார்பற்ற நிர்வாகத்தை நிறுவ முற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Post a Comment