Header Ads



யாழ்ப்பாணத்தில் 3 இராணுவத்தினர் சுட்டுக்கொலை - சாவகச்சேரியில் பதற்றம்


சாவகச்சேரியில் காவலரண் ஒன்றில் நேற்றிரவு பணியில் ஈடுபட்டிருந்த படையினர் மூவர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி முருகன் ஆலயப் பகுதியில் உள்ள காவலரண் ஒன்றில் பணியில் இருந்த படையினரே இன்று வெள்ளிக்கிழமை காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

நேற்று நள்ளிரவில் காவலரணில் துப்பாக்கிச் சூட்டுச்சத்தங்கள் கேட்டதாகவும், இன்று அதிகாலை சக படையினர் அங்கு சென்று பார்த்த போது மூன்று  படையினரும் சடலங்களாக காணப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது இராணுவத்தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், இந்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் மூன்றாவது தரப்பின் தொடர்பு ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட விரோதம் காரணமாக, படைச்சிப்பாய் ஒருவர் இரு படையினரைச் சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் இராணுவம் கூறியுள்ளது.

யாழ்.சாவகச்சேரி முருகன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று படைவீரர்கள் பலியாகியதை தொடர்ந்து அந்த பிரதேசத்தில் பதற்றநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் இடம்பெற்ற இடத்திலுள்ள படை முகாமைச் சூழ படையினர் குவிக்கப்பட்டு இருப்பதோடு முகாமிற்கு அருகில் உள்ள பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் எனக் கருதியே இந்த இடத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறிவருகின்றனர். 

இதேவேளை படைமுகாமில் உள்ள இராணுவப் பரிவினரை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பில் இராணுவத்தினருக்கிடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக இராணுவத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன

No comments

Powered by Blogger.