இலங்கை ஆபத்தின் விளம்பில் - எச்சரிக்கிறார் கபீர் ஹாஷீம் எம்.பி.
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் ஆபத்தானவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷீம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னொருபோதும் இல்லாதவாறு நியோ லிபரல் பொருளாதாரக் கோட்பாடுகளை பின்பற்றி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1977ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் அறிமுகம் செய்யப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகளை இந்த அரசாங்கம் கடுமையாக விமர்சனம் செய்து வந்ததது. எனினும், தற்போது மிகவும் மோசமான திறந்தப் பொருளாதாரக் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
திறந்தப் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் விமர்சனம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சி கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்து கல் எறியும் நடவடிக்கையாகக் கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜே.ஆர். ஜயவர்தன மக்களுக்கு தீங்கு ஏற்படக் கூடிய திறந்தப் பொருளாதாரக் கொள்கைகைள நடைமுறைப்படுத்தவில்லை எனவும், எனினும் தற்போதைய அரசாங்கம் மக்களை நெருக்கடியான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வறிய மக்களின் மீது வரிச் சுமையை திணித்து, செல்வந்தர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் நாட்டின் கலாச்சார விழுமியங்களுக்கு குந்தகம் ஏற்பட்டதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ள போதிலும், தற்போது மாதாந்தம் 200 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கபீர் ஹாஷீம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு படுகொலைச் சம்பவம் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். நான்கு மாவட்டங்களில் மட்டும் 40000 பெண் பாலியல் தொழிலாளர்கள் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கையும் வெகுவாக உயர்வடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment