சரத் பொன்சேக்காவை சட்டத்தரணியும் கைவிடுகிறார்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சார்பில் இனி வரும் காலங்களில் ஆஜராகப் போவதில்லை என சிரேஸ்ட சட்டத்தரணி நலின் லந்துவேஹெட்டி தெரிவித்துள்ளார். எனினும், வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பான மேன்முறையீட்டு வழக்கில் சரத் பொன்சேகாவின் சார்பில் லந்துவேஹெட்டி ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைகளின் போது தமது கட்சிக்காரருக்கு லந்துவேஹெட்டி உரிய சேவையாற்றவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களில் உண்மையில்லை என்பதனை சரத் பொன்சேகாவின் பாரியார் அநோமா பொன்சேகா, உறுதிப்படுத்த வேண்டுமென லந்துவேஹெட்டி கோரியுள்ளார்.
சரத் பொன்சேகாவின் சார்பில் இலவசமாகவே தாம் வழக்குகளில் வாதாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தொடர்ந்தும் இதனை செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார். லந்துவேஹெட்டி வாதாடிய வெள்ளைக் கொடி வழக்கு விசாரணை தொடர்பான தீர்ப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதுடன் மூன்றாண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்டத்தரணி லந்துவேஹெட்டி தொடர்பில் பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தால் அதனை திருத்துமாறு அனோமா பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கோரியுள்ளார். லந்துவேஹெட்டியின் சேவை பாராட்டுக்குரிடியது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் இணைந்து பணியாற்றியமைக்காக சரத் பொன்சேகா, பிள்ளைகள் மற்றும் தமது சார்பிலும் நன்றி பாராட்டுவதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Post a Comment