Header Ads



பிரபாகரன், ஒஸாமா பின்லேடன், அல்போன்ஸ்


யதீந்திரா 

[அண்மையில் திருகோணமலை ஷாஹிரா கல்லூரியில் அ.வ.முஹ்சீனின் ‘ஜனநாயகம் - வெள்ளை - கிறிஸ்தவ சமூகங்களின் அரசியல் முறைமை’ என்னும் நூல் வெளியீட்டின் போது, அரசியல் ஆய்வாளரும், எழுத்தாளருமான யதீந்திரா ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.] 

இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் 2009 ல் பிரபாகரனின் கதையை முடித்து வைத்தது. 2011 மே மாதத்தில் பின்லேடனின் கதையையும் நவம்பர் மாதத்தில் கொலம்பிய விடுதலை இயக்கத்தின் தலைவர் அல்போன்சின் கதையையும் முடித்து வைத்தது 

இந்த நூல் அடிப்படையில், அமெரிக்கா தலைமையில் அணிசேர்ந்திருக்கும் மேற்குலகத்திற்கு எதிரானதொரு நூலாகும். அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் ஜனநாயக அரசியல் முறைமையை இந்த நூல் வன்மையாக எதிர்க்கிறது. 

மேற்கால் முதன்மைப்படுத்தப்படும் ஜனநாயக அரசியல் முறைமையானது, மதச்சார்பற்றதாகக் கொண்டாடப்பட்டாலும் அது அடிப்படையில் கிறிஸ்தவ மத உணர்வினாலேயே வழிநடத்தப்படுகிறது. 

இதன் காரணமாகவே அமெரிக்காவால் தொடர்ந்தும் இஸ்லாமிய நாடுகள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன என்பதே இந்நூல் முன்னிறுத்த முயலும் வாதமாகும். 

ஆசிரியர் தனது தர்க்கத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் சிலுவை யுத்த காலத்தை நினைவு கொள்கின்றார். சிலுவை யுத்த காலமென்பது – போப்பின் தலைமையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைக் குறிக்கும். இது 12 ம் 13 ம் நூற்றாண்டுகளில் இடம்பெற்றவை. 

சிலுவை யுத்த காலத்தில் மேற்கிளம்பிய இஸ்லாமிய வெறுப்பின் தொடர்ச்சியே, தற்போது அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளாகும். 

தற்போது இஸ்லாமிய நாடுகள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துவரும் நவீன யுத்தங்களிலும், மேற்படி சிலுவை யுத்தகால இஸ்லாமிய வெறுப்பே செல்வாக்குச் செலுத்துகின்றது, என்பதே இந்நூல் முன்னிறுத்த முற்படும் தர்க்கமாகும். 

உண்மையில் இப்படியொரு பார்வை, குறிப்பாக – 2001 – செப்டம்பர் – 11ல் அமெரிக்கா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பின்னர்தான் தீவிரமடைந்தது எனலாம். பின் செம்படம்பர் சூழலில் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தே, மேற்குலகின் தலையீடுகளை இஸ்லாமிய - கிறிஸ்தவ முரண்பாடுகளின் பின்னணியில் பார்க்கும் போக்கொன்றும் தீவிரமடைந்தது. 

உண்மையில் பின் செப்டம்பர் சூழலில் இஸ்லாமிய நாடுகள் மட்டும் இலக்கு வைக்கப்படவில்லை. உண்மையில் செப்டம்பர் தாக்குதலானது அதுவரையான உலக ஒழுங்கையே மாற்றியமைத்தது. 

மேற்படி அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட [War on Terror] பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்தான், இந்த மாற்றத்தின் அடிப்படையாக இருக்கிறது. 

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் பிறந்த பின்னணியையும் நாம் பார்க்க வேண்டியது அவசியம். 

செப்டம்பர் தாக்குதல் இடம்பெற்றுவிட்டது. அடுத்து என்ன செய்வது, எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற கேள்விகள் அமெரிக்க மூளைசாலிகளை ஆட்கொள்கின்றன. பலரும் பலவிதமான ஆலோசனைகளை முன்வைக்கின்றனர். 

உடனடியாக ஆப்கானிஸ்தானை தாக்கியழிக்க வேண்டும் என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, எங்களது எதிரிகள் என்போரை இனியும் விட்டுவைக்கக் கூடாது என்கின்றனர். இதற்காக பாகிஸ்தானின் ஒத்துழைப்பை கோர வேண்டும். ஒத்துழைக்க மறுத்தால் அதற்கும் பாடமொன்று புகட்ட வேண்டும். 

இப்படி பலரும் பலவிதமான பரிந்துரைகளைச் செய்து கொண்டிருந்த போது ஒருவர் மட்டும் சற்று மாறுபட்ட வகையில் War on Terror என்ற வசனத்தை உச்சரிக்கின்றார் – அவர் கோலின் பவல் - அமெரிக்காவின் வெளிவகாரச் செயலாளர் அத்துடன் அமெரிக்க அதிபர் புஷ்சின் மூளையென வர்ணிக்கப்பட்டவர். 

அவரது வாதம் வேறு விதமாக அமைந்திருந்தது – நாங்கள் இப்போது ஆப்பானிஸ்தான் மீது உடனடியாக தாக்குதல் தொடுக்கும் திட்டத்தை அறிவித்தால், அது இஸ்லாமிய நாடுகள் மத்தியில் எதிர்ப்புணர்வை அதிகரிக்கும். எனவே நாம் இதனை உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக அறிவிப்போம். அவ்வாறு செய்வோமானால் உலகத்தின் ஆதரவை நாம் பெற முடியும். அதே நேரம் எதிரிகளை இலக்கு வைப்பதும் சுலபமாகும் என்றவாறு, கோலின்பவல் தனது திட்டத்திற்கான நியாயங்களைச் சொல்லுகின்றார். இறுதியில் அவரது திட்டமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. 

உண்மையில் இது பரந்ததொரு நிகழ்சித்திட்டத்தை உள்ளடக்கியிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிநிரலில் இலக்கு வைக்கப்பட்ட அமைப்புக்களின் அனேகமானவை இஸ்லாமிய அமைப்புக்கள் என்பதில் உண்மை இருக்கிறது. ஆனால் இந்த பயங்கரவாததிற்கு எதிரான யுத்தத்தின் முதல் பலி இஸ்லாமிய அமைப்போ அல்லது இஸ்லாமியத் தலைவரோ அல்ல. 

இதன் முதலாவது பலி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்தான். பிரபாகரன் பின்லேடனல்ல, தவிர பிரபாகரன் அமெரிக்க நிகழ்சிநிரலுக்கு எதிரான ஒருவருமல்ல. ஆனாலும் அது பிரபாரகனையும் உலக அரசியல் அரங்கிலிருந்து பிடுங்கியெறிந்தது. அன்றைய சூழலில் இருந்த வெற்றிகரமான [Anti-State Orgnazations] அரச எதிர்பு அமைப்புக்கள் இரண்டு – ஒன்று விடுதலைப்புலிகள் மற்றையது கொலம்பிய விடுதலை இயக்கம் [FARC]. 

உண்மையில் அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் - உலகெங்கும் இயங்கிய ஆயுத விடுதலை அமைப்புக்களை இலகுவாக துடைத்தழிப்பதற்கானதொரு வாய்ப்பை வழங்கியது என்பதே உண்மை. அதில் முதலில் அகப்பட்டுக் கொண்டவர்தான் பிரபாகரன். 

இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் 2009 ல் பிரபாகரனின் கதையை முடித்து வைத்தது. 2011 மே மாதத்தில் பின்லேடனின் கதையையும் நவம்பர் மாதத்தில் கொலம்பிய விடுதலை இயக்கத்தின் தலைவர் அல்போன்சின் கதையையும் முடித்து வைத்தது. 

உண்மையில் அமெரிக்காவின் இலக்கு பின்லேடன் போன்றவர்களே தவிர பிரபாகரன் அல்ல ஆனால் பிரபாகரன் போன்றவர்கள் இயங்குவதற்கான வாய்ப்பையும் இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் இல்லாமல் செய்தது. 

அமெரிக்கா இஸ்லாமிய அமைப்புக்களை இலக்கு வைப்பது போன்று, இஸ்லாமிய அமைப்புக்களும் தங்களது பிரதான அரசியல் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது – மேற்கு எதிர்ப்பு மற்றும் இஸ்ரேலிய எதிர்ப்பைத்தான். 

உண்மையில் 2001ம் ஆண்டிற்கு பிற்பாடு அமெரிக்காவிற்கு ஒரு பிரதான எதிரி உண்டென்றால், அது ஒசாமா பின்லேடன் மட்டுமே. அந்தளவிற்கு ஓசாமா ஒரு சிக்கலான நபராக மாறியிருந்தார். 

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் [US state department] மொழியில் சொல்வதானால் - அல்ஹயிடா என்பது ஒரு அமைப்பல்ல – அது ஒரு நாடுகடந்த முஜாகிதீன்கள் வலையமைப்பு [Transnational mujageethen networks]. செப்டம்பர் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி இரு மடங்காக உயர்த்தப்பட்டது. பின்லேடன் கொலையைத் தொடர்ந்து, தற்போது பெருமளவில் அது குறைக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் தாக்குதலால் அதிக நன்மை அடைந்தது அமெரிக்காவே என்றும் சிலர் வாதிட்டு வருகின்றனர். அதில் உண்மை இல்லாமலில்லை. பின்செப்டம்பர் சூழல் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பேரில் அமெரிக்கா தனது செயற்பாடுகளை விஸ்தரித்துக் கொள்வதற்கானதொரு சாதகமான வாய்ப்பையே வழங்கியிருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ அனைவரும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுடன் நிற்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். 

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் எச்சரிக்கை மிகவும் எளிமையானது – நீங்கள் எங்களுடனா அல்லது இல்லையா - இல்லையென்றால் அவ்வாறான நாடுகளையும் பயங்கரவாத்திற்கு துணை போபவர்கள் என்று இலக்கு வைப்பதற்கானதொரு சூழலை பின் செப்டம்பர் வழங்கியது எனலாம். ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்பதற்கு முன்னர் பாகிஸ்தானின் ஒத்துழைப்பைக் கோரிய கோலின் பவல் இவ்வாறுதான் முஷ்ரப்பிடம் கேட்டிருந்தார். –You are with us or not. 

இஸ்லாமிய – கிறிஸ்தவ முரண்பாட்டின் பின்னணியில் சமகால மேற்கின் அரசியல் நகர்வுகளை ஆராய்வோர், குறிப்பாக இஸ்லாமிய பின்புலம் தழுவி ஆராய்வோர் பேசும் விடயங்களை அவதானித்தால் அவர்கள் ‘இஸ்லாமிய அரசு’ என்னும் நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பதைக் காணலாம். 

இவர்களது கருத்தியலை நாம் அரசியல் இஸ்லாம் என்று வரையறுக்கலாம். ஆனால் அரசியல் இஸ்லாமை முதன்மைப்படுத்துபவர்களிடமும் சரியானதொரு அரசியல் பார்வை இல்லை என்றவாறான விமர்சனங்களும் உண்டு. 

நான் இங்கு பொதுநிலையில் சில வாதங்களை ஆராய விழைகிறேனே தவிர சரி பிழை பற்றிய வாதப்பிரதி வாதங்களுக்குள் ஈடுபடவில்லை. 

இவ்வாறு இஸ்லாமிய அரசு பற்றிப் பேசுவோரின் அரசியல் என்ன? இதனை பிறிதொரு வகையில் கூறுகின்றார் எகிப்திய மார்க்சியர் சமிர் அமீன்- அரசியல் இஸ்லாமை முதன்மைப்படுத்துவோரிடம் இருப்பது, இஸ்லாமியச் சொற்கள் பூசப்பட்ட அமெரிக்க தாராளவாதமேயன்றி வேறொன்றுமில்லை என்கிறார் சமிர் அமீன். 

அவர் ஈரானின் இஸ்லாமிய அரசு பற்றிப் பேசும்போது - ஈரானில் மேற்கத்தைய தொப்பி அணிந்தவர்களுக்குப் பதிலாக கறுப்புத்தொப்பி அணிந்த முல்லாக்கள் இருக்கின்றனர், அவ்வளவுதான் வேறுபாடு என்றவாறு விமர்சிக்கின்றார். 

அதே வேளை இவ்வகை இஸ்லாமிய அரசுகளிடம் காணப்படும் பொதுப் பண்பு பற்றியும் அவர் கூறுகின்றார். இவர்களிடம் காணப்படும் பொதுப் பண்பு - இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் எதிர்ப்பு இயக்கங்கள் அனைத்தையும் அழித்தொழித்து விடுவார்கள். 

அமீன் இதற்கு உதாரணமாக ஈரானியப் புரட்சியை எடுத்துக் காட்டுகின்றார். ஈரானியப் புரட்சியின் அரம்பத்தில் இடதுசாரிகள் முதன்மையான பங்களிப்பினை வழங்கியிருந்தனர் ஆனால் புரட்சி வெற்றிபெற்ற பின்னர் இடதுசாரிகள் அனைவரையும் ஒழித்துவிட்டனர். 

இஸ்லாமிய அரசுகள் பற்றி முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்ட மார்க்சிய ஆய்வாளர் ஹெலிடே, ஹமாசைக் கூட 80களில் இஸ்ரேலே உருவாக்கியதாகக் குறிப்பிடுகின்றார். இடதுசாரிகளை அழித்தொழிப்பதற்காகவே இஸ்ரேல் ஹமாசை ஊக்குவித்தது என்கிறார். 

ஆழ்ந்து நோக்கினால் இவ்வகை வாதங்களை இலகுவில் நிராகரித்துவிட முடியாது. 

இரண்டாம் உலக மகாயுத்தத்தைத் தொடர்ந்து உலக அரசியல் இருதுருவ நிலைப்பட்ட போட்டி அரசியலாக மாறியது. 1946ல் இருந்து 1991 வரையான காலப்பகுதியின் அரசியல் என்பதே அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பலப்பரீட்சை அரசியலாகவே இருந்தது. 

இதில் அமெரிக்காவிற்கு ஆதரவாக பல நாடுகளும் சோவியத்து ஆதரவாக பல நாடுகளும் இருந்தன. இரண்டு முகாம்களாக அரசியல் நகர்த்தப்பட்டது. இந்தக் காலத்தை அரசியல் நோக்கர்கள் பனிப்போர் அரசியல் என்று வரையறுப்பர். 

இந்தப் பனிப்போர் காலத்தில், இன்று அமெரிக்காவால் பயங்கரவாதிகளாக பட்டியலிடப்பட்டிருக்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் அனைத்தும் சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்க நிகழ்சிநிரலுக்கு ஒத்தாசை புரிந்தவைதான். 

இன்று அமெரிக்காவால் மிக ஆபத்தான அமைப்புக்கள் என்று கருதப்படும் அல்கய்டாவிலிருந்து ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புக்கள் அனைத்திற்குமே அமெரிக்காவில் நிதி சேகரிப்பு மையங்கள் இருந்தன. இதனை எவரும் மறுக்க முடியாது. 

இதனை நாம் எவ்வாறு கிறிஸ்தவ - இஸ்லாமிய முரண்பாட்டில் விளக்க முடியும்? எவ்வாறு அன்று இதே இஸ்லாமிய அமைப்புக்கள் அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொண்டன? அப்போது எங்கு போனது வரலாற்றுப் பகையுணர்வு? 

உண்மையில் இந்த விடயங்களை ஆழ்ந்து பார்த்தால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் இஸ்லாமிய நாடுகளில் கம்யூனிசத்தின் செல்வாக்கு உறுதிப்படுவதை தடுப்பதற்கு, இத்தகைய இஸ்லாமிய அமைப்புக்களுக்கு அமெரிக்காவின் உதவிகள் தேவைபபட்டன. 

அதே போன்று சோவியத்தை வீழ்த்துவதற்கு இஸ்லாமிய வாதம் அமெரிக்காவிற்குத் தேவைப்பட்டது. சோவியத் செல்வாக்கு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்க நலன்களுக்கு குறுக்காக மேற்படி முன்னைநாள் இஸ்லாமிய நட்பு சக்திகள் திரும்பிய போது, அமெரிக்கா அவர்களையும் தனது எதிரிப் பட்டியலில் போட்டுக் கொண்டது. இன்றைய முரண்பாட்டை இந்தப் பின்னணியில் பார்ப்பதற்கான சாத்தியங்கள்தான் ஏராளம் உண்டு. 

அமெரிக்காவின் தலைமையிலான யுத்தங்களின் அரசியலை ஆழ்ந்து புரிந்து கொள்ள முற்படுவோமானால் - ஓர் உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். 

இதற்கு நாம் முன்னைய யுத்தங்களின் அரசியலை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. கொலணித்து காலத்தில் ஏன் போர்த்துக்கீசர்- ஒல்லாந்தர் – பிரான்சியர் – ஆங்கிலேயர் என்ற பிரிவினர்களுக்கு இடையில் யுத்தங்கள் நிகழ்ந்தன. 

இவர்கள் தமக்குள் யுத்தம் செய்வதற்கும் மதவுணர்வுக்கும் என்ன தொடர்பிருந்தது. ஆனால் இவர்கள் தாம் ஆட்சிசெய்த பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்பினர் என்பது உண்மைதான். 

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை, ஆக்கிரமிப்பாளர்கள் நிர்வகிக்க வேண்டுமென்றால், தங்களுக்கு விசுவாசமான மக்கள் பிரிவுகளை வைத்திருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காகவே ஜரோப்பியர்கள் தங்களால் கைப்பற்றப்பட்ட இடங்களில் தங்களது மதங்களை பரப்புவதையும் ஒரு பிரதான செயற்பாடாகக் கொண்டிருந்தனர். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றனர். 

ஆனால் இதனை ஆழ்ந்து நோக்கினால் - இது மதங்களைப் பரப்புவதை பிரதான இலக்காகக் கொண்ட ஒரு செயலல்ல மாறாக தங்களது அதிகாரத்தை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான தந்திரோபாயமாகக் கையாளப்பட்டது. 

அதுவே பின்னர் பனிப்போர் காலத்தில் சோவியத்தை வீழ்த்துவதற்கான கருவியாக அமெரிக்கா அடையாளம் கண்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உலக அரசியல் ஒழுங்கு ஒற்றைமைய சக்தியின் வழிகாட்டலின் கீழ் வந்தது. இன்றுவரை அது தொடர்கிறது. 

இன்று அமெரிக்காவின் அதிகார மையத்துக்குள் இல்லாத நாடுகளென ஒரு சிலவற்றைத்தான் சொல்ல முடியும். இதில் முக்கியமானது சீனா, ஏனையவற்றுள் வடகொரியா மற்றும் ஈரான் போன்றவற்றைக் குறிப்பிட முடியும். இதனால்தான் சில அமெரிக்க ஆய்வாளர்கள் சீன-இஸ்லாமிய நாடுகளின் உறவுகளை [Confucian-Islamic connection] கன்பூசியன் - இஸ்லாமிக் கூட்டு என்று வரையறுக்கின்றனர். 

இந்தக் கூட்டின் அடிப்படையாக இருப்பது – அமெரிக்க அதிகாரத் மையத்தின் மீதான எதிர்ப்பு மட்டுமே. எந்தவகையில் நாம் துருவித்துருவி ஆராய்ந்தாலும் நமக்கு அகப்படுவது - இந்த உலகின் அதிகார மையத்தை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் அமெரிக்க நகர்வுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளும், தொடர்ந்தும் அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான அமெரிக்காவின் நகர்வுகளும்தான் இந்த உலக அரசியலாக இருக்கின்றது. 

இன்றைய உலக அரசியலை நாம், அமெரிக்கா தலைமையிலான ஒற்றை அதிகார அரசியலுக்கும் அந்த அதிகாரத்திற்கு சாவால்விட முயலும் சக்திகளுக்கும் இடையிலான முரண்பாட்டின் அரசியலாகவே பார்க்க வேண்டும். 

இந்தச் சவாலில் அதிகம் பங்கு கொள்ளும் நாடுகளும் அமைப்புக்களும் இஸ்லாமிய பின்புலம் கொண்டவையாக இருப்பதால் இதனை இஸ்லாமிய – கிறிஸ்தவ முரண்பாடாகக் காட்டக் கூடிய ஏதுநிலை தெரிகிறது. அவ்வளவுதான் விடயம். 

அமெரிக்காவின் புதிய மூலோபாய நகர்வு – ஆசியாவை மையப்படுத்தியதாகவே மாறியிருக்கிறது. இதனை ஹில்லரி கிளின்ரனின் வார்த்தையில் சொல்வதானால் [The Asia-Pacific has become a key driver of global politics] உலக அரசியலை நகர்த்திச் செல்லும் பிரதான சக்தியாக, ஆசிய-பசுபிக் பிராந்தியமே இடம்பெறவிருக்கிறது. 

உலக அரசியலை நகர்த்த [US-State Department] அமெரிக்க இராஜாங்க திணைக்களத் தகவல்களின் படி இஸ்லாமிய தீவிரவாதிகளின் செல்வாக்குமிக்க இடங்களாக தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளே முதன்மையானவையாக இருக்கின்றன. எனவே அமெரிக்காவின் ஆசியா நோக்கிய காய்நகர்த்தலில் யாரொல்லாம் அகப்படப் போகின்றார்கள், எவரெல்லாம் பலிக்கடாக்களாகப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

இதுவரை நான் சில நிலைமைகளைச் சுட்டிக் காட்டியிருந்தேன். என்னுடைய சொந்தக் கருத்துக்கள் சிலவற்றையும் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

ஒவ்வொரு சமூகமும் தனது தேவைகளிலிருந்து தனக்கான அரசியல் உறவுகளை தீர்மானிக்கின்றது. தனக்கான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கின்றது. அந்தவகையில் நான் ஈழத்தமிழ் சமூகத்தின் ஒரு அங்கம் என்றவகையில், மேற்கின் அரசியல் நகர்வுகள் குறித்த விமர்சனங்களில் கவனம் செலுத்தும் நிலையில் இல்லை. 

இன்றைய சூழலில் ஈழத்தமிழ் மக்களிடம் இருக்கும் ஒரேயொரு அரசியலே, அனைத்துலக சமூகம் ஏதாவது எங்களுக்குச் செய்யும் என்னும் நம்பிக்கை மட்டும்தான். எனவே அந்த அனைத்துலக சமூகத்துடன் கைகோர்க்க வேண்டிய விடயங்களிலேயே நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். இதனை எவரும் கேட்க முடியாது. இது எமது சமுதாய நிலையிலிருந்து எடுக்கப்படும் முடிவாகும். 


No comments

Powered by Blogger.