ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் பாய்ந்தன
ஈரான் நாட்டின் மீது மேலும் பொருளாதாரத்தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளது. ஈரானின் அணுவாயுத உற்பத்தியைக் கண்டித்து 180 ஈரானிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய தடைகளைக் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஈரான் நாட்டு எரிசக்தி துறையை இலக்கு வைத்தே தடைகள் கொண்டு வரப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இடம்பெற்ற இரண்டு நாட்களின் பின்னரே ஐரோப்பிய யூனியன் இந்நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தெஹ்ரானிலிருந்து தனது பணியாளர்களை திரும்ப அழைத்ததன் பின்னர் பிரித்தானியா தனது நாட்டிலிருந்து அனைத்து ஈரான் ராஜதந்திரிகளையும் வெளியேற்றியது. புதிய தடைகள் 39 பேரையும் 141 கம்பனிகளையும் இலக்கு வைத்து உள்ளன என்றும் பயணத்தடைகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் ஆகியன அத்தடைகளில் அடங்குகின்றன என்றும் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக்கொள்கைப் பேச்சாளர் கதரின் அஷ்ரன் தெரிவித்தார்.
ஐரோப்பிய யூனியனின் சில நாடுகள் ஈரானின் ஏற்றுமதியில் தங்கியிருப்பதால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதில் ஐரோப்பிய யூனியனின் வெளியுறுவு அமைச்சர்கள் மத்தியில் கருத்துடன்பாடு ஏற்படவில்லை என்று
செய்தியாளர்கள் தெரிவித்தனர். ஈரான் மீதான எதிர்காலத்தடைகள் குறித்து ஜனவரி மாத்திற்கு முன்பாக தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்
Post a Comment