இலங்கையில் இஸ்லாத்தின் வளர்ச்சி - நடுங்கும் சிங்கள பேரினவாதம்
எமது குறிப்பு - (இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு நீதியாக நடத்தப்படுமாயின் 20 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டில் உள்ளனர் என்பதை அறிந்துகொள்ளமுடியும். அவ்வாறான ஒருவேளையில் சிங்களப் பேரினவாதம் தென்னிலங்கையிலும், வடகிழக்கில் தமிழ் தேசியமும் முஸ்லிம்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையலாம். இந்நிலையில் சிறந்த தந்திரோபாய உபாயங்களை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் இலங்கை முஸ்லிம் உம்மா தள்ளப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்)
அபூ மஸ்லமா
இலங்கையில் முஸ்லிம்கள் அநுபவிக்கும் உரிமைகள் எவ்வளவு தாராளமாக உள்ளனவோ அதே போன்று அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தாராளமாகவே உள்ளன. முஸ்லிம் நாடுகளில் இல்லாத மதச்சுதந்திரங்களை நாம் இங்கு பின்பற்றுகிறோம். தாடி வளர்க்கலாம். முகத்தை மறைக்கலாம். விதம் விதமாய் தஃவா செய்யலாம். இப்படி பற்பல.
சிங்கள வீரவிதான என்றும் சிங்கள ஆரக்ச சபா என்றும் முகமூடிகள் போட்ட பேரினவாதம் இப்போது ஜாதிக ஹெல உருமய எனும் உருவத்தில் வந்து நிற்கிறது. நிற்கட்டும். பிரச்சனை என்னவென்றால் வடகிழக்கில் தோற்கடிக்கப்பட்ட புலி பயங்கரவாதத்தின் தொடரான எச்சங்களாக முஸ்லிம்களை சிங்கள மக்கள் மத்தியில் காட்ட முனைவதாகும்.
“உரிமைகள்” பற்றி பேசுபவர்கள் பயங்கரவாதிகளாக அல்லது பிரிவினைவாதிகளாக இனங்காணப்படும் அதேவேளை “தேசியம்” பற்றி பேசுபவர்கள் மண்ணின் மைந்தர்களாக இனங்காணப்படும் நச்சு சூழல் இது. அதாவது சிறுபான்மை கதைத்தால் பிரிவினைவாதம். பெரும்பான்மை பேசினால் தேசியவாதம் எனும் மாயை நிலை.
விடுதலை புலிகள் அநுராதபுரம், அரந்தலாவை, தலதாமாளிகை, பிட்டகொட்டுவை என அப்பாவிகளை வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்து சிங்களவர்கள் மத்தியில் தங்களை பயங்கரவாதிகளாக இனங்காட்டிக்கொண்ட அரசியல் சித்தர்கள். இவர்களின் முகவரி முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்த போது் எல்லா சிங்களவரும் ஆர்ப்பரித்தனர். ஆடிப்பாடினர்.
புலி பாசிஸ அமைப்புடன் நடந்த இறுதி யுத்தத்தில் சிங்கள பேரினவாத மீடியாக்கள் எல்லாமே போட்டி போட்டுக்கொண்டு களச்செய்திகளை சேகரித்தன. வெளியிட்டன. பின்னர் அவை இறுவட்டுக்களில் போரியல் பாடல்களாக ஒவ்வொரு சிங்களவரினது இதயத்திலும் ஆழமாக பதிக்கப்பட்டது. விதைக்கப்பட்டது.
போரின் வெற்றியை கடைசி சிங்கள கிராமம் வரை கொண்டு செல்ல இந்த ஊடகங்களை அரசு சரியாகவே பயன்படுத்தியது. யுத்த செய்திகள், வெற்றி செய்திகள் என்பவற்றில் எந்தவொரு தணிக்கைகளும் இடம்பெறவில்லை. ஊடகங்களில் வந்த நிர்வாணமாக கிடந்த புலி பாசிஸ்ட்களின் உடலங்களை கூட வெட்கமில்லாமல் குடும்பமாக ரசித்தனர் சிங்ளவர்.
யுத்த வெற்றியை அரசியல் இருப்புக்கான வெற்றியாக மாற்றியது அரசு. இராணுவ கண்காட்சிகள் பலவற்றை நிகழ்த்தி மக்களை “வோர் மூட்டில்” பராமரித்தது. ஆயுத மோகம் என்பதன், அடிப்படை ஆதிக்க மோகம் எனும் மறை கருத்தியலை இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மறந்து போனதன் உடனடி விளைவு “சரத் பொன்சேகாவின் எழுச்சி”. நீண்ட கால விளைவு “சிஙகள பொளத்த பேரினவாதத்தின் எழுச்சி”.
இறுதி போரில் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னரான ஊடக அரசியலிற்கான ஒரே வாய்ப்பு ஆளும் தரப்பை விமர்சிப்தன் ஊடாக நகர்வது. அதற்கான சந்தர்ப்பங்கள் இந்த அரசால் வழங்கப்படாத நிலையில் முஸ்லிம்கள் மீதான தப்பபிப்ராயங்களை வெளியிடுதன் ஊடாக பரபரப்பு சூழலில் தமது இப்பை தக்கவைத்தலாகும்.
“அரசியலை இந்து மயப்படுத்து. இந்து மதத்தை ஆயுதமயப்படுத்து” எனும் அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் சொன்ன இனவாத சித்தாந்தம் இதுவரை அவர்களிற்கு கை கூடவில்லை. ஆனால் அதிர்ஷ்ட வசமாக சிங்களவரிற்கு அது கைகூடியுள்ளது. இந்த நாட்டில் “அரசியல் பௌத்த மயப்படுத்தப்பட்டு பல வருடங்களாகி விட்டது. அதே போன்று பொளத்த மதம் ஆயதமயப்படுத்தப்பட்டும் உள்ளது.”
இஸ்லாத்தின் மீது காழ்ப்புணற்ச்சி கொண்டவர்கள் குறைவானவர்களே. முஸ்லிம்கள் மீது காழ்ப்புணற்ச்சி கொண்டவர்களே அதிகம். முஸ்லிம்களின் கலாச்சார வெளிப்படுத்தல்கள் அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பொளத்த துறவிகளிற்கு. ஒன்றுமே இ்ல்லாத மதத்தை வைத்து காலத்தை ஓட்டும் இவர்களிற்கு இவ்வாறான அச்சங்கள் வருவது இயல்பே.
“நாளைய இலங்கையில் முஸ்லிம்கள்” எனும் அச்சம் இரு தரப்பினரிற்குமே உருவாகியுள்ளது. தங்கள் மதத்தின் இருத்தல் தொடர்பாக சிங்களவரிற்கும், சிங்கள பேரினவாதத்தின் எழுச்சி காரணமாக இஸ்லாத்தின் இருப்பு தொடர்பாக முஸ்லிம்களிற்கும் இது எழுந்துள்ளதெனலாம்.
இப்போது ஒரு புதிய பாணி அல்லது யுக்தி கையாளப்படுகிறது. ஒரு மஸ்ஜித்தையோ அல்லது மதரஸாவையோ உடைக்க வேண்டுமென்றால் முன்வரிசையில் ஆமத்துருக்களை நிறுத்தி தமது இலக்கு நோக்கி நகர்கின்றமை. கலகக்கார கும்பலை முஸ்லிம்கள் பதில் பலாத்காரம் ஊடாக தடுக்கலாம். ஆனால் முன்னிலையின் ஆமத்துருக்கள் அணிவகுக்கும் போது ஒன்றுமே செய்ய முடியாத நிலை. நேற்றைய முன்தினம் இது தான் நடந்தது தெஹிவலையில். கிண்ணியாவிலும், அநுராதபுரத்திலும், களுபோவிலையிலும் இது நடந்த போது நாம் ஒன்றும் பேசவில்லை. ஏதோ பிரதேச செய்தியை கேட்பது போல் செய்தியாக கேட்டு செய்தியாக மறந்து விட்டோம்.
புத்தளத்தில் ஒரு சிங்கள பொலிஸ்காரர் கொல்லப்பட்டதற்கு முழு புத்தளத்தையுமே பழி வாங்கும் இனவாத பொழுதுகள் இவை. இந்த நாட்டில் கும்பல் கும்பலாக பொலிசார் கொல்லப்பட்ட போது எழுதாத சிங்கள நாளிதல்கள் மற்றும் இணையங்கள் இந்த விடயத்தில் மட்டும் இனவாதத்துடன் எழுதுகின்றன.
இந்த தேசத்தில் இனவாதம் பன்சலைகளிலிருந்தும், ஊடகங்களிலிருந்துமே கிளப்பப்படுகின்றன. ஊதி பூதகரமாக மாற்றப்படுகின்றன. கற்பனைகளை கலந்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக, காட்டுமிராண்டிகளாக, முட்டாள்களாக, பிற்போக்குவாதிகளாக, பகற்கொள்ளையராக, சுயநல விஷமிகளாக, காமுகர்களாக, சுரண்டல் வர்த்தகர்களாக என இன்னோரன்ன வடிவங்களில் அப்பாவி சிங்கள மக்கள் முன் உருவகப்படுத்தப்படுகின்றனர்.
இந்த நாட்டின் பெரும்பாலான அரசியல்வாதிகளிடமோ அல்லது படைத்துறையினரிடமோ இனவாதம் தானாகவே உருவாவதில்லை. அரசு மக்களை எப்படி மூளைச்சலவை செய்கிறதோ அதே போன்றே பேரினவாத சக்திகள் படைத்துறை அதிகாரிகளை, நிர்வாக சேவை அதிகாரிகளை என இலக்கு வைத்து அவர்களை மூளைச்சலவைக்கு உட்படுத்துகிறது.
இன்றைய போட்டி உலகில் எல்லா துறை சார்ந்த சக்திகளும் தங்கள் வசதிக்கும், முன்னேற்றத்திற்கும் ஏற்றாற்போல் இந்த முஸ்லிம் பயங்கரவாதம் எனும் கோஷத்தை உயர்த்திப்பிடிக்கின்றன.
இன்றைய சிலோன் முஸ்லிம்களின் நிலை ஒரு உத்தரவாதமற்ற, நிச்சயமற்ற வாழ்வியல் போக்காக மாறியுள்ளது. பேரினவாதம் மியன்மாரை மாதிரியாகக் கொண்ட அரசியல், சமூகவியல் பற்றி சிந்திக்கும் வேளையில் முஸ்லிம்கள் தங்களிற்கான “மொடல்” சமூக அமைப்பை பற்றி சிந்திக்க இயலாத சமூகமாக விறைத்து நிற்கின்றனர். இது பற்றி பேசும் அல்லது எழுதும் மனிதர்கள் கூட தங்கள் பணி அத்துடன் முடிந்து விட்டதாக திருப்தி அடைகின்றனர்.
ஒரு பெரும்பான்மை சமூகத்தவன் முஸ்லிமின் மீது தீங்கு செய்தாலோ அல்லது தவறிழைத்தாலோ அந்த தவறை தட்டிக் கேட்கவோ அல்லது சுட்டிக் காட்டவோ முஸ்லிமிற்கு முடியா ஒரு அவல நிலை. அப்படி தட்டிக்கேட்டால் அது சிறுபான்மை பெரும்பான்மை பிரச்சனையாக வடிவமெடுக்கும் பொறிமுறையை பேரினவாதம் சிறப்பாக நிறுவியுள்ளது.
இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் பலவற்றை நாம் காண நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. மடாலங்கள் இலங்கை அரசியலை நிருணயித்த காலங்கள் மலையேறி இன்று மடாலயங்கள் இலங்கை முஸ்லிம்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைமைப்பீடமாக மாறி நிற்கின்றன. எங்கு என்ன பிரச்சனை என்றாலும் ஜம்மியதுல் உலமா கூட நாயக்க ஹாமத்துருவின் உள்ளத்தை திருப்தி படுத்தும் அரசியல் போக்கில் சிக்கி தவிக்கிறது.
முஸ்லிம் அரசியல் எனும் மாய மானை கண்டு ஏமாறும் சமூகமாகவே நாம் நிற்கின்றோம். இந்த அரசியலோ அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளோ ஒரு போதும் நமது சமூக பாதுகாப்பை வழங்க கூடிய சக்திகள் அல்ல. நாம் ஒவ்வொரு முறையும் சொல்லும் வார்த்தைகளையே மீண்டும் சொல்கிறோம்.
“தாகூத்தின் அடிமையால் அல்லாஹ்வின் அடிமையை ஒரு போதும் பாதுகாக்க முடியாது”. நாம் அல்லாஹ்வின் அடிமைகள். மீண்டும் சொல்கிறோம் நாம் அல்லாஹ்வின் அடிமைகள்.
Post a Comment