சம்மாந்துறையில் 17 வயது முஸ்லிம் மாணவி அடித்துக்கொலை - வாப்பா, மாமா கைது
பாடசாலை செல்லும் வயதில் காதல் புரிந்தார் என்பதற்காக தனது சொந்த மகளை தந்தை அடித்து, உதைத்து கொலை செய்த சம்பவமொன்று கிழக்கு மாகாணத்தின் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை - தல்அரம்மல 2ம் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகள் ஒரு ஆணை காதலிக்கிறார் எனவும் அந்த ஆணுடன் சுத்தித் திரிவதாகவும் அயலவர்கள் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை கேட்ட தந்தை கொதித்து எழுந்து வீட்டுக்கு வந்து தனது மகளை கண்டித்துள்ளார். மகள் மீது வைத்துள்ள அதிக பாசத்தால் என்னவோ தெரியவில்லை பரம எதிரி ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதுபோல் மகளை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
நான்கு, ஐந்து பேர் சேர்ந்து தாக்கினால் எப்படி இருக்குமோ அப்படியான அடி, உதைகளை வாங்கிய 17 வயதுடைய முத்து மொஹம்மது ஜமாசா என்ற யுவதி அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து நேற்று மாலை 6 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு உடன் விரைந்த பொலிஸார் சந்தேகநபரான தந்தையை கைது செய்தனர். உயிரிழந்த யுவதியின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment