பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தினம் - மஹிந்த வாழ்த்துச் செய்தி
பலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு தினமான செவ்வாய்கிழமை எனது அரசாங்கத்தினதும் இலங்கை மக்களினதும் சார்பில் பலஸ்தீன மக்களின் நியாயமான போராட்டத்துக்கும் அவர்களது சுதந்திரத்துக்கான உரிமை உள்ளிட்ட மறுக்கப்பட முடியாத உரிமைகளை வெற்றி கொள்வதற்கும் ஆதரவு தெரி விக்கிறோம்.
பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினத்தையொட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி யில் மேற் கூறியவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் கூறியதாவது, சமாதானமானது பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. அந்த அடிப்படை விதியானது மத்திய கிழக்கு மோதலை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை கூறுகிறது. நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள மோதலானது மனித குலத்தின் அபிலாஷைகள் மற்றும் பெறுமதிக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.
சுமார் நாற்பதாண்டு காலம் பலஸ்தீன பிரச்சினையுடன் தனிப்பட்ட ரீதியில் என்னைப் பிணைத்துக் கொண்டுள்ள நிலையில் பலஸ்தீனர்களுக்கு அவர்களது அடிப்படை மனித உரிமைகள் நீண்டகாலமாக மறுக்கப்பட்டுள்ளதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். இரு நாடுகள் என்ற அந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை எனது அரசாங்கம் மீண்டும் எடுத்துரைக்கிறது.
பலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு தினம் இம்முறை குறிப்பிட்ட அபிவிருத்திகளுடன் கூடிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிலையில் வருகிறது. பலஸ்தீன அதிகாரத்தின் தலைமைத்துவம், ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன நாட்டுக்கு முழு அங்கத்துவம் வழங்குவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. இந் நிலையில் பலஸ்தீனம் நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தை வெற்றிகரமாக முழுமைப்படுத்தி வருகிறது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் பிரஸல்ஸில் உள்ள ஒருங்கிணைப்பு கமிட்டி ஜுன் மாதத்திலும் நியூயோர்க்கில் உள்ள கமிட்டி செப்டம்பரிலும் இந்த விடயத்துக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளன. எனவே சுதந்திரம் நிலையானதுமான பலஸ்தீன நாடு உருவாக கூட்டாக செயற்படும் காலம் வந்து விட்டது என்று ஜனாதிபதி தனது செய்தியில் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment