வடக்கில் 8.000 தொழில் வாய்ப்புகள் - முஸ்லிம்களும் பயனடைய வேண்டும்
இளைஞர் விவகார அமைச்சினால் வடக்கு கிழக்கிலுள்ள பத்தாயிரம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் செயற்திட்டம் ஒன்று அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என இளைஞர்கள் தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் இரா.அகிலன் தெரிவித்துள்ளார்.
யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் முறைசாராக் கல்விப் பிரிவினரால் வலயமட்டத்தில் நடைபெற்ற கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
முறைசாராக் கற்கை நெறியினை NVQ தகைமைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. NVQ மூலம் ஒருவர் தமது கல்வி நிலைக்கு ஏற்ப பட்டத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். வடக்கு கிழக்கில் உள்ள பத்தாயிரம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கும் செயற்திட்டம் அடுத்த மாதம் முதல் செயற்ப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களுள் கிழக்கில் இருந்து இரண்டாயிரம் இளைஞர் யுவதிகளும், வடக்கில் இருந்து எட்டாயிரம் இளைஞர் யுவதிகளும் உள்வாங்கப்படவுள்ளனர். அவர்களில் ஆறாயிரம் பேர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர் எனவும் அவர் குறிப்பிட்டார். பாடசாலைக் கல்வியை முடித்து விட்டு வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இளைஞர் விவகார அமைச்சினால் தொழிற் பயிற்சிகள், நிதி உதவிகள், மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கவும் அமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனாலும் இளைஞர், யுவதிகள் அந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முன்வருகின்றார்கள் இல்லை. தொழில் திறனுக்கான கற்க வேண்டும். ஆனால் சிலர் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காகவே பயிற்சி பெறுகின்றனர். இதனால் எது விதமான பயனும் கிடைக்கப் போவதில்லை. எமக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி சகல துறையிலும் முன்னேற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment