Header Ads



புலிகளுக்கெதிரான முஸ்லிம்களின் சாபம்..!

அஸீஸா சஹாப்தீன்
நீண்ட 21 வருட இடைவெளியின் பின்னர் இந்த இன்னல்மிகு சரிதை மீண்டும் புரட்டிப்பார்க்கப்படுகிறது. வடபுல முஸ்லிம் பரம்பரை இதை மறக்கமுடியுமா? மறக்கவும் கூடுமா? 1983 ஜுலைக்கலவரம் இன்றுவரை அதே உத்வேகத்துடன் உனர்வுபூர்வமாக மீட்டிப்பார்கப்படும் வேளை அனுராதபுர ரஜமகாவிகாரை சம்வம் மீட்டிப்பார்க்கப் படும்வேளை நாம் மட்டும் எங்ஙனம் மறப்பது? இந்த தேசத்திலே எதைக்கேட்டு யாருக்குக் கஷ்டம் கொடுத்தார்கள் வடபுல முஸ்லிம்கள். யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இரண்டு மணிநேர அவகாசம் வன்னி முஸ்லிம்களுக்கு இரண்டு நாள் அவகாசம் முல்லைதீவு முஸ்லிம்களுக்கு உடனடி வெளியேற்றம் என்ன கொடுமையிது? 1990 ஐக்கியதேசியக்கட்சி ஆட்சியிலிருந்த போது வடபுலத்தை விட்டும் முஸ்லிம்களை வெளியேற்றும் புலிகளின் திட்டத்திற்கு உறுதுணையாக அவசர நிலைமைகளின்போது மக்களைக் காக்கவேண்டிய சர்வதேச தொண்டுநிறுவனங்களும் செயற்பட்டதுதான் மறக்கவே முடியாத துரதிஷ்டமான நிகழ்வாகும். காலா காலத்திற்கு அகதிகளாக அல்லல்பட வேண்டிய துயரத்திற்கு இற்றைக்கு 21 வருடங்களுக்க முன்னரே இந்தச் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் புலிகளுக்குத் துணை போனதை இத்துயர ஏட்டின் துவக்கத்திலேயே சொல்லி வைக்க விரும்புகிறேன்.
1990 ஆகஸ்ட் மாதமளவில் மன்னார் பெருநிலப்பரப்பைப் பிரிக்கும் நெடுஞ்சாலை  தாம்போதிப் பாலம் புலிகளினால்குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட செய்தி தீவு முழுவதும் வேகமாகப் பரவியது. அது மட்டமல்ல கொழும்பு-தலைமன்னார் புகையிரதப்பாதையிலுள்ள மன்னார் புகையிரதப் பாலமும் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. தீவுப்பகுதியில் முஸ்லிம்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளிவிட்டு அவர்களுக்கென்று நிவாரணமாக வரும் அடிப்படைத்தேவைகளுக்கான அரிசி, சீனி, பருப்பு, மா, மண்ணெண்ணெய் போன்றவை உலகத் தொண்ஸ்தாபனங்களின் வாகனங்கள் மூலமாக கூட்டுறவுக்கடைகளிலிருந்து ஏற்றப்பட்டு புலிகளின் தலைமைத் தரிப்பிடத் தளமான கீரிக்கு கொண்டு செல்லப்பட்டன. முஸ்லிம்கள் அத்தியவசியப் பொருட்களின்றி

தவியாய்த்தவித்தனர். அத்துடன் உள்ளாற்றிலும் மீன்பிடிக்கத்தடை விதிக்கப்பட்டது. இத்தனை கட்டுப்பாடுகளும் தீவுப்பகுதியிலிருந்து முஸலிம்கள் மொத்தமாக வெளியேறிவிட வேன்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. வன்னியில் முல்லைதீவு, வவுனியா, விடத்தல்தீவு, வங்காலை, அடம்பன் பகுதிகளிலிருந்து தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இலங்கையிலேயே தரம்வாய்ந்த  மத்திய மகாவித்தியாலயமாகத் திகழ்ந்த எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயமும், முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயமும் திட்டமிட்டே முடக்கப்பட்டன. பல்லாயிரம் ஆசிரியர்களையும், வைத்தியர்களையும், பொறியியலாளர்களையும், சட்டத்தரணிகளையும் உருவாக்கிய பெருமைக்குரிய இப்பாடசாலை தமிழ் முஸ்லிம் மாணவர்களின் இன ஒற்றுமைக்கு அடிப்படைத் தளமாகவும் திகழ்ந்தது. இந்தக்கல்வி எழுச்சியையும் இன ஒற்றுமையையும் தகர்த்தால் முஸலிம்களின் எழுச்சியைத் தடுத்து நிறுத்திவிட முடியுமென்று பாசிசப் புலிகள் திட்டம் தீட்டியிருந்தார்கள்.

இரவில் மண்ணெண்ணெய்க் குப்பிவிளக்குப் பாவனை. வைத்திய சேவை கிடையாது. குழந்தைப் பேறு பார்ப்பது முதாட்டிகள்தான், இரவில் நடமாட முடியாது அவசர தேவைக்கு வெளியில் செல்வதாக இருந்தால் அரிக்கன் லாம்புடன் தலைமைபீடத்திலிருந்து அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும். இக்காலத்தில் நாம் வடித்த கண்ணீருக்கு அளவே கிடையாது.
இவ்விதம் இரண்டு மாதங்கள் கழிந்தன தீவுக்குள் எருக்கலம்பிட்டி ஓரளவு பலமான நிலையில் இருந்தது. இவ்வூருக்குள் தமிழ் ஆயுதக் குழுக்கள் உள்ளிடுவதைத் தடுப்பதற்காக லுயுர்ரு வாலிப முன்னணி பாதுகாவலாய் இருந்தது.

இதன் தலைமைத்துவத்தை வகித்த ர்.ஆ.பாயிஸ் குண்டுவைத்தும், அமீனும் றம்சீனும் புலிகளால் கடத்தப்பட்டு  இரண்டயங் கட்டைக் காட்டுக்குள் வைத்து சுட்டும் கொல்லப்பட்டனர்.

அடுத்த இடியாக எமக்கு வந்த செய்தி 'புலிகள் எருக்கலம்பிட்டியில் முகாம் அமைக்கப் போவது.' சொன்னதுபோல் 8வட்டார கடற்கறை வீதியிலுள்ள புள்ளிக் குட்டியாரின் 05 வீடுகளிலும் புலிகள் ஆயுதக் கிடங்குகளை அமைத்தனர். கடல் வழிப் பாதைகள் அனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டில் புலிகளின் குழுக்களுக்கு பகல் இரவு உணவுக்காகப் பத்துப் பதினைந்து என்று சாப்பாட்டுப் பார்சல்களுக்குக் கட்டளையிட்டுச் செல்வது. ஆயுதங்களுக்குப் பயந்து எம்மூரார் சமைத்துக் கொடுத்தனர். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ததையறிந்து பின்னர் வருத்தமடைந்தோம். இந்தியாவிலிருந்தும் ஏனைய அண்டிய நாடுகளிலிருந்தும் பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் கடத்தி வர இத்தீவு பயன்படுத்தப் பட்டது.

சலவைத் தொழிலாளிகள், தோட்டத் தொழிலாளிகள், இடையர்களின் மக்களே கூடுதலாகப் புலி உறுப்பினர் களாகப் பயன் படுத்தப்பட்டனர். சலவைத் தொழிலாளி மூலமே ஒருவரின் வீட்டில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஜூப்பாவும் தொப்பியும் தைக்கப்பட்டுள்ளன. வெட்டுக்கத்திகளும் ஒரு அறை முழுக்க வைக்கப்படடிருந்த தகவலும் எமக்குக் கிடைத்தது. இவற்றின் ஒரு பகுதிதான் புதுவெளி முஸ்லிம்களைக் கொல்லப் பயன்படுத்தப்படடுள்ள உண்மையும் எமக்குத் தெரிய வந்தது. பயந்து எங்கே செல்வது?

1990 ஆக்டோபர் 16ம் திகதி மன்னாரிலுள்ள தங்க நகைக் கடை உரிமையாளர்களைக் கடத்திச் சென்று ஆயுத முனையில் அவர்களின் தங்கங்களெல்லாம் சூரையாடப்பட்டு இரண்டு நாட்களின் பின் விடுவிக்கப்பட்டனர். அன்றே தகவல் வெளியானது ஊருக்குள் கொள்ளைகோஷ்டி செல்ல இருப்பதென்பது. குழுக் குழுக்களாக  ஆயுதம் தரித்தவர்கள் வீடு வீடாகக் கொள்ளையடித்தனர். சுரேஷ் என்ற புலித் தலைமையில் எமது வீட்டுக்குள்ளும் அறுவர் கொண்ட குழு வந்தது. அவர்களின் உடல் முழுவதும் ஆயுதங்களே, பார்த்தால் பயங்கரம். இது நடந்தது 18-10-1990ன் மாலையிலேயே கொள்ளைக்கோஷ்டி ஊருக்குள் வரத் தொடங்கி விட்டது. சகல ஊர் மக்களும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்தனர். பெறுமதியான பொருட்களையெல்லாம் பள்ளம் தோண்டிப் புதைத்தனர். அதையும் பயங்கரவாதிகள்  சூறையாடினர். இரவு 7.50 மணி கொள்ளைக் கோஷ்டி எமது வீட்டுக்குள் நுழைந்தது. வீட்டு ஆண் பிள்ளைகளையே முதலில் தேடினர். எனது கணவரின் நெற்றிப்பொட்டில் பிஸ்டலை வைத்துத் தள்ளிக்கொண்டுபோய் கட்டிலில் வைத்து விட்டு கதவை மூடிவிட்டனர். நானும் எனது 10 வயது சின்ன மகனும் மூன்று பெண் மக்களும் வெளியில். எம்மைப் பயமுறுத்தி கைகள் கழுத்துகளிலிருந்தவற்றையெல்லாம் கழற்றி பறித்துக் கொண்டனர்.எமது நகைகள் மட்டும் 15 பவுன்கள் பறி போனது. அலுமாரியெலாம் சோதனை செய்தனர், எம்மிடம் மன்னார்வாசி ஒருவரின் ந கைப் பெட்டியும் அமானிதமாகத் தரப்பட்டு அந்த அலுமாரியின் அடியில் வைக்கப்பட்டிருந்தது அது அவர்களின் கண்களில் படவில்லை பாதுகாப்பாக வேயிருந்தது.
மீண்டும் எனது கணவரிடம் சென்று 25 பவுண் நகையும் 25 லட்சம் ரூபாய்ப் பணமும் கேட்டனர். அதற்கு எனது கணவர், நாங்கள் அரச ஊழியர்கள் எங்களிடம் இருந்தவற்றையெல்லாம் எடுத்துவிட்டீகள் மேலும் தேடிப் பார்த்து இருந்தால் எடுத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். என்னிடம் பறித்த சாமான்களில் ஏதாவது ஒன்றைத் தரும்படிக் கேட்டேன் காலையில் சொல்லிவிடுகிறோம் என்ற பதிலுடன் சென்றுவிட்டனர்;. அக் கொல்லையர் கூட்டம் சென்ற பிறகு அடைக்கலப் பொருட்களைப் பாதுகாத்த  இன்னொரு உண்மையை எனது கணவர் கூறினார். நெருங்கிய உறவினராகிய தங்க நகைக் கடை முதலாளியின் கோடிக் கணக்கில் பெறுமதியுள்ள தங்கக் கட்டிகளும்  ரூபாய் நோட்டுக்களும் என் கணவரின் படுக்கையிலேயே பாதுகாக்கப்பட்டது. விடிந்தவுடன் அவரவர் பொருட்களை உரியவர்களிடம் கையளித்தோம்.
23.10.1990 ம் நாள் காலையிலேயே ஒலி பெருக்கி அறிவித்தல் ஊரூராக நடை பெற்றுக் கொண்டிருந்தது. 'இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் புலிகளின் தலைமையகத்திற்கு வந்து வழிப் பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும், 3 தினங்களுக்குள் ஊரைவிட்டுச் செல்ல வேண்டும் என்றும், வீட்டுச் சாவி கதவிலேயே வைத்து விட வேண்டுமென்றும், விடத்தல் தீவு, பள்ளிமுனை 5 தென்னம் பிள்ளைக் கடல் மூலமே பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டது.

மானமும் உயிரும் காப்பாற்றப்பட வேண்டுமென்ற மக்கள் வழிப் பாஸ் பெறுவதற்காக முண்டியடித்தனர். அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இறுக்கமான நிருவாகிகளாகத் தங்களை வெளிக்காட்டினார்கள். கொடூரப் பார்வைகளால் மக்களைக் கொல்லத்துணிந்தார்கள். பாஸ் பெற்றுக் கொண்டவர்கள் திரும்பிப் பார்க்காமல் வெளியேறி விட வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. பாஸ் பெற்றவர்கள் படிப்படியாக வெளியாகத் தொடங்கினர். என்ன நடக்கிறது, யாருடன் கதைப்பது, மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் எங்கே பெறுவது, எமது விருப்பு வெறுப்புக்களை யாரிடம் தெரிவிப்பது என்பதுபற்ற்p எதுவுமே தெரியாது. கலங்கிய மனதோடு வெளியேறிவிட வேண்டும் வெளியேறிவிட வேண்டும் என்ற சொற்களே எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. விடத்தல் தீவு நீர் வழிப் பாதையில் செல்வதாயின் ஒரு மைல் தூரம் சேற்றில் நடற்தே கறையேற வேண்டும். நடக்க முடியாத வயதானவர்களின் நிலையென்ன, கர்ப்பினித் தாய்மார்களின் அவலம், குழந்தைகளின் பரிதாபம்- இத்துன்பத்தை எப்படி விபரிப்பது. அத்தியவசியமாகத் தேவைப்பட்ட பொருட்களையும், கைக் குழந்தைகளையும் தூக்கிய தாய்மார்கள் அவலத்தை எப்படி வர்ணிப்பது. இது போலவே பள்ளிமுனைக் கடற்பாதையில் உறவுகளெலல்லாம் கடல்கடந்து, காடுமேடுகளையெல்லாம் நடந்தே கழித்து, பசியோடும் பட்டினியோடும் பாரச் சுமைகளோடும் வவுனியா போய்ச் சேர்ந்து அங்கிருந்தே வாகனங்கள் மூலம் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம், அம்மீளாத் துயர்களுக் கெல்லாம், இவ்வவலங்களுக்கெல்லாம் எங்களிடம் கண்ணீரைத் தவிர பதிலேதுமிருக்கவில்லை.

எந்தத் துணையுமில்லாத நடக்கவியலாத எல்லோராலும் கைவிடப்பட்ட எங்களுர் கஞ்சியப்பாவையும் அனுப்பிவிட்டே 27ம் திகதி என்னையும் எனது நான்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு மாறா வடுக்களோடு வீட்டைவிட்டு வெளிக்கிட்டார் எனது கணவர். பெரிய பள்ளிவாசலடியில் நின்று கண்ணீர் மல்கி குனூத்தோதி அல்லாஹ்வையழைத்தோம். எங்கள் பிரார்த்தனையின் வேதனை வார்த்தைகளில் கலந்து, நா தளுதளுத்தது. கைகளிரண்டும் வானை நோக்க பார்வைகள் இறை சன்னிதானத்தைத் தேடியது. அப்போது நாங்கள் இறைவனிடத்தில் வேண்டியது, இறiவா! யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத எம்மை, இம்மீளாத் துயரிலாழ்த்தி நிர்க்கதிக்குள்ளாக்கிய வர்களை மனம் மாறச் செய்துவிடு இல்லாத பட்சத்தில் மிகக்கேவலமான முறையில் அவர்களை அழித்து முஸ்லிம்களைப் பாதுகாத்தருள் என்ற இறுதிப் பிரார்த்தனையை எம்மண்ணில் விதைத்துவிட்டுக் கைத் தூக்குகளோடு நாலு மைல் தூரத்தை கால் நடையாகக் கடந்து ஐந்து தென்னம்பிள்ளையடிக்கு வந்து சேர்ந்தோம்.

எம்மைப்போல் பல்லாயிரக் கணக்கான மக்கள் பிண்ணிப்பிணைத்த நெஞ்சோடும், அழுது வீங்கிய கண்களோடும் கடற்கரையை நிரப்பிக் கொண்டிருந்தனர். நொண்டி, முடம், நிறைமாதக் கர்ப்பிணிகள், கையிலும் வயிற்றிலும் குழந்தை சுமந்த தாய்மார்கள் நடக்கத் தள்ளாடும் வயோதிபர்கள் நடந்து களைத்த மூதாட்டிகள், வயோதிபர்களைச் சுமந்த பிள்ளைகள், நோயாளிகள், இத்தா முடியாத விதவைகள், தமக்கு நடப்பது என்ன என்பதைக் கூட அறியாத குழந்தைகள் கூட்டம், கொட்டோ கொட்டென கொட்டிய மழை, வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. மேலே மழை-கீழே மழை வெள்ளம், கடல் நீர் திவலைகள் சுமந்து, மழை நீரோடு சுழன்றடித்த காற்று, ஆர்ப்பரிக்கும் ஆழிப் பேரலையின் பேரோசை, எல்லாவற்றையும் விஞ்சியதாக எங்கள் குழந்தைகளின் அழுகைச்சத்தம் மழைக் குளிரோடு கடலலைக் குளிரும் நடு நடுங்க வைக்க படகுகளின் வருகைக்காகக் காத்திருந்த விழிகள் எதிர்பார்ப்புகளை சமுத்திரத்தை நோக்கி எறிய... இம் மனிதப் பேரவலத்தை விவரிக்க எங்களிடம் வார்த்தைகளேயில்லை. எல்லாவற்றையும் மறந்து, கொஞ்ச நேரம் என்னை நினைத்திருங்கள் என்று இறைவன் நாடினான்போலும்.

படகுகள் வந்தன மக்கள் தாய்ம் மண்ணுக்கு விடை கொடுக்கத் துவங்கினார்கள். இரவு வந்தது, அடுத்த நாள் பகலும் வந்தது, இரவும் வந்தது பொழுதும் புலர்ந்தது மக்கள் சிறுகச்சிறுக வெளியேறி எதுவுமே நடக்காத ஓர் மயான அமைதி நிலவியது.எமக்கு இரண்டாம் நாளே படகு கிடைத்தது  எமது படகில் குழந்தைகள் உட்பட 30 பேர் இருந்தார்கள் சாதாரணமாக ஒரு படகில் 30 பேர் பயணம் செய்வது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். என்ன ஆச்சிரியம் பாருங்கள் நாம் பிரயாணத்தை ஆரம்பித்தவேளை கடல் குளம் போல அலை மங்கிக் கிடந்தது.

நாங்கள் சென்ற நேரம் எமது படகு மட்டும் சிலாவத்தறை வரையே எம்மையேற்றிச் சென்றது. சிலாவத்துறையை அடைந்த நாம் கற்பிட்டி செல்ல வழிவகை தெரியாது கடற்கரையிலேயே  நின்றோம். சுpலாவத்துறை மக்கள் ஏற்கனவே அவ்விடத்தைவிட்டுச் சென்றிருந்ததால் சிலாவத்துறைக்  கடற்பிரதேசமும் மனித சஞ்சாரமற்று வெறிச்சோடிக்கிடந்தது.  நேரம் பகல் 12.00 மணியைக் கடந்து விட்டது. பசி வேறு தாங்கமுடியவில்லை. அப்போது சிலாவத்துறை இராணுவ முகாம் ஒரு அபாயத்தை எதிர் கொள்ளும் தயார் நிலையில் இயங்கிக் கொண்டிருந்தது. சிலாவத்துறை மக்கள் அனைவரும் வெளியேறியது இராணுவத்தைப் பொறுத்தவரைக்கும் அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்கவில்லை. எனது கணவர் தனக்குத் தெரிந்த ஒரு இராணுவ அதிகாரி இருப்பதாகவும் அவரைச் சந்தித்தால் ஏதேனும் உதவி பெறலாமென்றும் இரானுவ முகாமிற்குச் சென்றார்கள். இறைவனின் நாட்டம் எமது எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. இராணுவத்தினருக்கு மாவு மூடைகள் ஏற்றிக் கொண்டு டிங்கிப்படகு ஒன்று வருவதாகக் கூறிய இராணுவ அதிகாரி அதை கற்பிட்டி வரையும் செல்வதற்கு ஒழுங்குபடுத்தித் தருவதாகவும் வாக்களித்தார்.  எமக்கு பகல் போசனத்திற்காக அரிசி, சீனி, பருப்பு, மா போன்றவற்றையும் கொடுத்தனுப்பியிருந்தார்.

பாத்திரங்கள் உள்ள ஒரு வீட்டில் அவசர அவசரமாகச் சமைத்து பசிதீர்த்துக் கொண்டு இரவைக்கும் உதவலாம் என்ற எண்ணத்துடன் ரொட்டிக்காக மாவைப் பிசைந்து எடுத்துக்கொண்டோம். சரியாக இரண்டு மணிக்குப்படகு வந்தது. அதிலிருந்த 40 மூடை மாவையும் மருமக்களும் பேரப்பிள்ளைகளும் கூட இருந்த ஏனைய ஆண்களும் முதுகில் சுமந்து கரை சேர்த்தனர். அதே வேளை பெண்கள் இரவுணவுக்காக ரொட்டியைச் சுட்டெடுப்பதில் கவனம் செலுத்தினோம். சுரியாக 3.00மணிக்கு கற்பிட்டி நோக்கிப் பயணப்படவேண்டியேற்பட ரொட்டி சுட்ட அரைவாசியோடு புறப்பட்டோம்.

அதிகாலை இரண்டு மணிபோல படகு குதிரை மலையை அடைந்தது. குதிரை மலைப்பிரதேசத்தில் வைத்து கடல் கொந்தளிக்கத்துவங்கியது. படகு கவிழ்ந்து விடுமோவென அச்சம் கொண்டு அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டோம் ஒரு மணி நேரப் போராட்டத்தின் பின் அதிகாலை மூன்று மணியளவில் கற்பிட்டிக் கரையை அடைந்தோம். வடபுல முஸ்லிம்களின் துன்ப நிலையறிந்து அவர்களை அழைத்துச் செல்ல உறவினர்கள் குழுமியிருந்தனர். குடாப்பகுதி மக்கள் கடல்மார்க்கமாப் போராடி ஓரளவு குறைந்த துன்பங்களுடன் தாய் மண்ணை விட்டும் வெளியேறினர். ஆனால் ஏனைய மக்கள் நிலை மிகவும் பரிதாபத்திற்குறியதாகியது. காடுகளையும் களனிகளையும் பொடிநடையாகவே கடந்து வந்துள்ளனர். வரலாற்றில் எங்கேனும் இப்படியோர் துன்பம் துணை செய்த மக்களாலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறதா? எமது ஊன் உண்ட உறவுகளாளேயே உடமைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்ட சோகத்தை என்னவென்று சொல்வது. எமது எண்ணங்களுக்கு எல்லைகளே இருக்கவில்லை நாம் பட்ட துன்பங்களுக்கு அளவீடுகளே இருக்கவில்லை.  

ஆதரவு தருபவர் யார் என்ற ஏக்கம் அனைவர் மனதிலும் குடிகொண்டிருந்தது. அரவனைத்து ஆறுதல் தருபவர் யார் என்ற கலக்கம் மேலோங்கியிருந்தது. ஒரு போதும் கனவில் கூட நினைத்திருக்காத பெருந்துன்பத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் எமக்குத் தந்தனர் அப்போது மனமுருகி நாம் விட்ட சாபம் எல்லைகள் கடந்து இறை சந்நிதானத்தைத்தட்டி இருக்கிறது இருபது வருடங்களின் பின்னர். அனைத்தையும் பார்த்துக்கொண்டு மௌனிகளாக இருந்த தமிழ் மக்களையும் அது பலி கொள்ளும் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை.

2 comments:

  1. Very Good article. Ithu Aththanaiyum unmai. Avarkalin kanneerum thuwavum 19 vathu varudaththil vidaiyalikkappaddana.

    ReplyDelete
  2. ALLAH the Great. Arasan andru kollum. Dheivam nindru kollum (after 19 years)

    ReplyDelete

Powered by Blogger.